இது என் கதை


திரும்பிப் பார்க்கிறேன்;
திருப்பங்களைப் பார்க்கிறேன்:
இது என் கதை

எனது கதையை எழுதக்கூடிய அளவிற்கு
நான் சிறந்த மனிதன் ஒன்றுமில்லை;
இருப்பினும், எனது வாழ்க்கை
வளைந்து வளைந்து செல்லும் ஆற்றைப்போல்
திருப்பங்கள் பல சந்தித்து சென்றுள்ளதைத்
திரும்பி பார்க்கும்போது,
வாழ்க்கையின் அர்த்தங்களை
விளங்கிக்கொள்ளமுடியுமா என்று
விழைகின்றேன்;
எனக்கு தெரிந்ததை நான் எழுதுகிறேன்;
உங்களுக்கு புரிந்ததை
நீங்கள் சொல்லுங்கள்!


1.

முதல் திருப்பம்


எனது கிராமம் ஒரு சிறிய கிராமம்;
எனது குடும்பம் ஒரு ஏழை குடும்பம்;
எனக்கு ஒரு அண்ணன்;
ஒரு தங்கை;

எனது பள்ளிக்கூடம் பழைய அரசு பள்ளி;
9ஆம் வகுப்புவரை நான் எப்படி படித்தேன் என்பது
எனக்கு நினைவில்லை;
நான் அதுவரை ஒரு சராசரி மாணவனாக
இருந்திருப்பேன் என்று நினைக்கிறேன்;
நான் 9ஆம் வகுப்பு படித்தபோது
ஒரு புது ஆசிரியர் வந்தார்;
அவர் பெயர் திரு. சண்முக சுந்தரம்;
அவர் மிக நன்றாக பாடம் நடத்தினார்;
அவர் நான் நன்றாக படிக்க நன்கு ஊக்கப்படுத்தினார்;
அது எப்படி நடந்தது என்று எனக்கு தெரியவில்லை;
திடீரென்று நான் நல்ல மாணவனாகிவிட்டேன்;
நான் எனது வகுப்பு மதிப்பெண்ணில்
முதல் மூன்று மாணவருக்குள் வந்துவிட்டேன்;


தமிழாசிரியர் திரு.சுப்பிரமணியம் என்பவர்
எனது வாழ்விற்கு மற்றொரு திருப்புமுனை;
அவர் அடிக்கடி பாட்டு, பேச்சு,
கட்டுரைப்போட்டிகள் வைத்தார்;
நான் பல போட்டிகளில் பரிசு பெற்றேன்;
விளையாட்டில்கூட கபாடி, நீளத்தாண்டுதல் போன்ற
போட்டிகளில் பரிசு வாங்கினேன்;

எனது பள்ளி தலைமை ஆசிரியர் கணக்கு வாத்தியார்;
நான் 11ஆம் வகுப்பு பொது தேர்வில்
நூற்றுக்கு நூறு எடுப்பேன் என்று எதிர்பார்த்து வந்தார்;
ஆனால், பொது தேர்வில் கவனக்குறைவாக
ஒரு 20 மதிப்பெண் கேள்வியை தவறவிட்டுவிட்டேன்;
ஒரு கேள்விக்கு சிறிது தவறாக எழுதிவிட்டேன்;
விளைவு: நான் கணக்கில் 76 மதிப்பெண்தான் பெற்றேன்;


நான் கலைக்கல்லூரியில்
பியூசி (Pre-University Course) பயில
விண்ணப்பம் அனுப்பினேன்;
அப்போது எனக்கு பாலிடெக்னிக் பற்றி
அவ்வளவாக தெரியாது;
ஆனால், எனது சில வகுப்பு நண்பர்கள்
பாலிடெக்னிக்கில் பொறியியல் டிப்ளமோ பயில
விண்ணப்பம் அனுப்பினர்;
நானும் அதுபற்றி அறிந்து
சில பாலிடெக்னிக்கிற்கு விண்ணப்பம் அனுப்பினேன்;
ஆனால், திடீரென்று எனது சில வகுப்பு நண்பர்கள்
கலைக்கல்லூரியில் பியூசியில் சேர்ந்து விட்டனர்;
அது தெரிந்து நானும் ஓடோடிப்போய்
கலைக்கல்லூரியில் பியூசியில் சேர்ந்து விட்டேன்;
ஆனால், அதன் பிறகு வந்தது
பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக்கில் இருந்து
அழைப்பு கடிதம்;

அது 1980ல்!
அப்போது பாலிடெக்னிக் டிப்ளமோவிற்கு
மதிப்பு மிக அதிகம்!
வேலை வாய்ப்பு மிக உறுதி!
ஆனால், ஏற்கனவே நான் பியூசியில் சேர்ந்துவிட்டதால்
அதை பொருட்படுத்தாமல் விட்டுசிட்டோம்;
கல்லூரியில் சேர்ந்துவிட்டால் புத்தாடை எடுக்க,
எனது பெற்றோர் எங்களை
நாமக்கல் அழைத்து சென்றார்;
அங்கு ஆரம்பமானது ஒரு திருப்பம்!

எமது பள்ளி தமிழ் ஆசிரியர் திரு. காளிமுத்து
எங்களை பார்த்துவிட்டார்;
பாலிடெக்னிக் கிடைக்க
எத்தனையோ பேர் ஏங்கி கிடக்கிறார்கள்!
நீங்கள் என்ன வந்த வாய்ப்பை விட்டுவிட்டு
அப்பாவியாக இருக்கிறீர்கள்
என்று போட்டார் குண்டை!
வந்தது மனதில் பெருங்குழப்பம்!
ஒருவழியாக பாலிடெக்னிக் செல்வது என்று
எல்லோரும் தீர்மானித்தோம்;
அதற்கு கலைக்கல்லூரியில்
பள்ளி மாற்று சான்று பெறவேண்டுமே!
என்ன செய்வது ஏது செய்வது என்று
எதுவும் தெரியவில்லை!
அனது அப்பா அவர் நண்பர்மூலம்
ஒரு வழக்கறிஞரை பிடித்தார்;
அவர்மூலம் ஒருவழியாக கல்லூரியில்
பள்ளி மாற்று சான்று பெற்று பார்த்தபோது
பாலிடெக்னிக்கில் அழைக்கப்பட்ட நாளின்
அழைக்கப்பட்ட நேரம் ஆகிவிட்டது!
அவசர அவசரமாக பஸ் பிடித்து
பொள்ளாச்சி நோக்கி பயணபட்டு வந்தபோதும்
அன்றைய நாளில் தாராபுரம் வரைதான் வரமுடிந்தது!
அன்றிரவு தாராபுரத்தில்
ஏதோ ஒரு இரவு காட்சி திரைப்படம் பார்த்துவிட்டு,
ஒரு சத்திரத்தில் தலைக்கு 2 ரூபாய் கொடுத்து
காலைவரை படித்திருந்தோம்;
மறுநாள் காலை அங்கிருந்து புறப்பட்டு,
பொள்ளாச்சி வந்து பாலிடெக்னிக் முதல்வரை பார்த்தால்
அவர் ஒரே வரியில் முடித்துவிட்டார்-
நேற்றே உங்கள் வாய்ப்பு முடிந்துவிட்டது என்று!
நிலையை சொல்லி எனது தந்தையின் நண்பர்
போராடி பார்த்தார்;
வேண்டுமானால், காத்திருப்போர் பட்டியலுக்கு
விண்ணப்பித்துவிட்டு போங்கள்!
சேர்ந்தவர்கள் யாரேனும் விலகினால்
உங்களை சேர்க்க பார்க்கிறோம் என்றார்!
கல்லூரி படிப்பையும் கைவிட்டுவிட்டு வந்தபிறகு
காத்திருப்பு பட்டியலில் எப்படி காத்திருப்பது என்ற
கவலை மிகுந்து நின்றபோது,
முதல்வர் மற்றொரு வாய்ப்பைக் கூறினார்;
வேண்டுமானால், DCP (வணிகவியல் டிப்ளமோ) சேருங்கள்!
அதுபற்றி விபரம் அறிய துறைத்தலைவர்
கருணாநிதியை பாருங்கள் என்றார்;

சரியென்று அவரை சென்று சந்தித்தோம்;
வங்கி மற்றும் கம்பெனிகளுக்கு வேலைக்கு செல்லலாம்;
வேலை வாய்ப்பு மிகுந்துள்ள நல்ல படிப்புதான் என்றார்;
பாலிடெக்னிக் என்றாலே உயர்ந்ததுதான்!
அதிலுள்ள கல்வி மட்டமாக இருக்குமா
என்ற எண்ணத்தில் DCP யில் சேர தீர்மானித்தோம்;
இப்படித்தான் ஆரம்பமானது எனது பாலிடெக்னிக் வாழ்க்கை!

கலைக்கல்லூரியில் சேர்ந்தபடி
எனது கல்வி போய் இருந்தால்
நான் என்னவாகியிருப்பேன் என்று எனக்கு தெரியவில்லை!
பாலிடெக்னிக்கில் பொறியியல் படிப்பு கிடைந்திருந்தால்
நான் பொறியாளர் ஆகியிருப்பேன்!
என்விதி என்னை பொறியாளர் ஆகவிடாமல்
புரட்டி போட்டுவிட்டது!

------------------------------------------------------------------------------------------------------------------------














Comments